சாயல்குடி அருகே மூக்கையூர் மீன்பிடித்துறைமுக கட்டுமானப் பணிகள் 2019க்குள் நிறைவடையும் என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மூக்கையூர் மீன்பிடித்துறைமுகம் ரூ.113.90 கோடி மதிப்பில் 250 விசைப்படகுகள் மற்றும் 200 நாட்டுப்படகுகள் நிறுத்தி வைக்கும் வகையில் கட்டுமானப் பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. மேலும் இத்துறைமுகத்தில் மீனவர்கள் பயன்பெறும் வகையில் மீன் ஏலக்கூடம், மீன்களை காய வைப்பதற்கான தளம், வலை பின்னும் கூடம், மீனவர்கள் ஓய்வறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.
இப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமையில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ், மீன்வளத்துறை பொறியாளர் பி.முத்துக்குமார், உதவி செயற்பொறியாளர் நாகரத்தினம், உதவி இயக்குநர் சிவக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாத்துரை உள்ளிட்டோர் உடன் சென்றனர். மீன்பிடிதுறைமுக கட்டுமானப்பணிகள் 2019-க்குள் முழுவதும் நிறைவடையும் என அப்போது மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தெரிவித்தார்.