ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே கீழப்பருத்தியூர் பகுதியில் மணல் கடத்தி வந்த 2 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து 2 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
பார்த்திபனூர் வைகை ஆற்றுப் பகுதியில் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பார்த்திபனூர் சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் கீழப்பருத்தியூர் குறிஞ்சக்குளம் விலக்குச் சாலையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது உரிய அனுமதியின்றி 2 டிப்பர் லாரிகளில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து பார்த்திபனூர் போலீஸார் வழக்குப் பதிந்து மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த இருளாண்டி மகன் முருகவேல்(39), வீரசோழன் வடக்குத் தெருவைச் சேர்ந்த சுவாமிநாதன் மகன் பிரசாந்த் ஆகிய இருவரையும் கைது செய்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.