ராமநாதபுரத்தில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
மக்களவைத் தேர்தலில் முழுமையான வாக்குப்பதிவை சாத்தியப்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உள்ள மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்கள் சார்பில் வண்ணக் கோலங்கள் வரையப்பட்டிருந்தன. அங்கன்வாடிப் பணியாளர்கள் வரைந்த இந்த கோலத்தில் இந்திய வரைபடம், வாக்களிப்பதன் அவசியம், விலைக்கு வாக்குகள் அல்ல போன்ற கருத்துடன் கோலங்கள் இடம் பெற்றிருந்தன. மேலும், "எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல' என்ற வாசகங்களை அங்கன்வாடி பணியாளர்கள் ஏந்தி நின்றனர். இந்நிகழ்ச்சியை ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கான பொதுத்தேர்தல் பார்வையாளர் நரேந்திர சிங் பர்மாரும், மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் ஆகியோர் பார்வையிட்டு அங்கன்வாடி பணியாளர்களை பாராட்டினர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் த.கெட்சி லீமா அமலினி, மகளிர் திட்ட இயக்குநர் கோ.குருநாதன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் டி.ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.