ராமநாதபுரத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வரும் 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலும், பின்னர் வாக்கு எண்ணும் தேதியான மே 23 ஆம் தேதியும் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கொ.வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்குப் பதிவு வரும் 18 ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.
வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்கள், பரமக்குடியில் மதுக்கூடம் மற்றும் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு மதுபானங்களை விநியோகம் செய்யும் கூடங்கள், மண்டபம் கடலோர காவல் படையில் உள்ள கேன்டீன் மற்றும் உச்சிப்புளியில் உள்ள மதுக்கூடத்தை வரும் 16 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் வரும் 18 ஆம் தேதி வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணி வரையிலும் மூடவேண்டும்.
மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான வரும் மே 23 ஆம் தேதி முழுமையும் மூடிவைத்துவிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.