ராமநாதபுரம் மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தங்களுக்கு தபால் வாக்குக்கான விண்ணப்பம் வழங்கப்படவில்லை என அதிகாரிகளுடன் சனிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வாக்குப் பதிவு பணியில் ஈடுபடுவோருக்கான மூன்றாம் கட்டப் பயிற்சி ராமநாதபுரம் நகர் தனியார் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. பயிற்சிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், ஆசிரியைகளும் வந்திருந்தனர். அவர்களில் பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பள்ளி ஆசிரியர்கள் தங்களுக்கு மக்களவைத் தேர்தலுக்கான தபால் வாக்கு விண்ணப்பம் வழங்கப்படவில்லை என ஆதங்கப்பட்டனர். இதையடுத்து தபால் வாக்குகளின் விண்ணப்பங்களை வழங்கவேண்டும் எனக் கோரி கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பயிற்சி நடந்த இடத்தில் இருந்த ராமநாதபுரம் வட்டாச்சியர் முத்துச்செல்வி வந்து ஆசிரியர்களைச் சமரசப்படுத்தினார்.
ஆனால், தபால் விண்ணப்பம் வேண்டும் எனக் கோரி தொடர்ந்து ஆசிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின் விண்ணப்பம் விரைவில் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறி ஆசிரியர்களை சமரசம் செய்ததால் அமைதி ஏற்பட்டது.