ராமநாதபுரத்தில் மாரடைப்பால் மரணமடைந்த நடிகரும், மக்களவை முன்னாள் உறுப்பினருமான ஜே.கே. ரித்தீஷ் உடலுக்கு, அமைச்சர்கள் மற்றும் திரைப்படத் துறை பிரமுகர்கள் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
ஜே.கே. ரித்தீஷ் மாரடைப்பால் சனிக்கிழமை உயிரிழந்தார். பொதுமக்கள் அஞ்சலிக்காக, அவரது உடல் ராமநாதபுரம் ஆர்.ஆர்.சேதுபதி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.
அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம். மணிகண்டன், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், ஏ. அன்வர்ராஜா எம்.பி., அதிமுக மாவட்டச் செயலர் முனியசாமி, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எஸ்.நவாஸ்கனி மற்றும் நடிகர்கள் ராதாரவி, கார்த்தி, போண்டாமணி, நகைச்சுவை நடிகர்கள் மயில்சாமி, சூரி, ரமணா, இயக்குநர் மனோபாலா, ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டோர் அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், முக்கிய பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர். மாலையில், அவரது உடல் நயினார்கோவில் பகுதியிலுள்ள அவரது சொந்த ஊரான மணகுடிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.