பயிர்க் காப்பீடு இழப்பீடு நிதியை வழங்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே பயிர்காப்பீடு திட்ட நிதியை வழங்கக் கோரி விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் அறிவித்த நிலையில், காப்பீடு திட்ட நிதியானது விரைவில் வழங்கப்படும் என பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர், துணை முதல்வர் அறிவித்தனர். ஆனால், இன்னும் நிதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில், முதுகுளத்தூர் பகுதி இளங்காக்கூர், பிறப்பக்களூர், உலையூர் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலையில் வந்து இழப்பீடு கோரி முற்றுகையிட்டனர்.
இதேபோல, ராமநாதபுரம் தேவிபட்டினம் பகுதியைச் சேர்ந்த நாரணமங்களம், வெண்ணத்தூர், மேட்டுக்கொல்லை, சம்பை, பாப்பனேந்தல், முத்துரெகுநாதபுரம் உள்ளிட்ட பத்து கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து பயிர்க் காப்பீடு தொகை வழங்கக் கோரி முற்றுகையிட்டனர். விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் ஆட்சியர் கொ.வீரராகவராவை சந்தித்து மனு அளித்துவிட்டு சென்றனர்.