காப்பீடு திட்டத்தில் முழுமையான இழப்பீடு கிடைக்குமா? துணை முதல்வர் வாக்குறுதியால் விவசாயிகள் எதிர்பார்ப்பு

திருவாடானை பகுதியில் தேர்தலுக்குள் பயிர் காப்பீடு திட்டத்தில் முழுமையான இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்

திருவாடானை பகுதியில் தேர்தலுக்குள் பயிர் காப்பீடு திட்டத்தில் முழுமையான இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியபடி,  கிடைக்குமா என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக கடுமையான வறட்சி ஏற்பட்டு நெல் விவசாயம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 -2018 ஆண்டு விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தில் 1 லட்சத்து 56 ஆயிரம் பேர் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்திருந்தனர். காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்திவந்தனர் 
இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் முதல் கட்டமாக மாவட்டத்தில் 83 வருவாய் கிராமங்களுக்கு 25 சதவீத இழப்பீட்டுத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இரண்டாவது கட்டமாக 17 வருவாய் கிராம விவசாயிகளுக்கு 100 சதவீத இழப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்பட்டது. மூன்றாவது கட்டமாக சுமார் 150 வருவாய் கிராமங்களுக்கு 100 சதவீத இழப்பீட்டுத் தொகை வரவு வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 
இதில் முதல் கட்டமாக 83 கிராமங்களுக்கு மிகக் குறைந்த அளவாக ஏக்கருக்கு ரூ. 5,300 மட்டுமே விவசாயிகளின்  வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. இதனால் அந்த  கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த வாரம்  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இப்பகுதிக்கு பிரசாரத்திற்கு வந்த போது,  இதுபற்றி விவசாயிகள் புகார் தெரிவித்தனர். அப்போது  துணைமுதல்வர், தேர்தலுக்குள் முழு இழப்பீடும் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்தார்.
 தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் இதுவரை துணைமுதல்வர் கூறியபடி இழப்பீடு தொகை வரவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com