ராமநாதபுரம் மாவட்ட தீயணைப்புத்துறை பணியாளர்கள் மக்களவை மற்றும் பரமக்குடி (தனி) தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்கும் வகையில் தபால் வாக்குப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம் என செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி, பரமக்குடி, ராமநாதபுரம் என 11 இடங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் 190-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வரை தேர்தல்பணி, தீயணைப்பு நிலைய பணிகளில் ஈடுபடுவோருக்கு தபால் வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து திங்கள்கிழமை தினமணி நாளிதழில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து, மாவட்ட தீயணைப்பு அலுவலர் சாமிராஜ், தேர்தல் பணி மற்றும் தீயணைப்பு நிலையங்களில், தேர்தல் நாளன்று பணியில் இருக்கும் பணியாளர்கள், வாக்காளர் அடையாள அட்டை நகல்களை வழங்கி, தபால் வாக்குப் படிவங்களை பெற்று வாக்களிக்கலாம் என உத்தரவிட்டுள்ளார்.