பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிக்கட்ட பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை நிறைவு பெற்றது.
பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் என்.சதர்ன்பிரபாகர், திமுக வேட்பாளர் சண்.சம்பத்குமார், அமமுக வேட்பாளர் எஸ்.முத்தையா, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அ.சங்கர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பி.ஹேமலதா, முக்குலத்தோர் தேவர் புலிப்படை வேட்பாளர் ச.சண்முகராணி உள்பட 13 பேர் போட்டியிடுகின்றனர். இவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டத்திலிருந்து தொகுதி முழுவதும் தீவிர வாக்குச் சேகரிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இறுதிக்கட்ட பிரசாரம்: ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டனர்.
அதிமுக வேட்பாளர் என்.சதர்ன் பிரபாகர் மற்றும் கூட்டணி கட்சியின் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார்நாகேந்திரன் ஆகிய இருவரும் காலை 8 மணி முதல் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன், மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, யாதவர் சங்க தலைவர் மேகநாதன் ஆகியோருடன் எமனேசுவரம், பரமக்குடி நகர் பகுதியில் வீதி, வீதியாகச் சென்று வாக்குச் சேகரித்தனர். திமுக வேட்பாளர் சண்.சம்பத்குமார் அக்கட்சியின் மாநிலக்குழு பொறுப்பாளர் சுப.த.திவாகர் தலைமையில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் உ.திசைவீரன், ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார் ஆகியோருடன் பிரசார வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
அமமுக ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் வ.து.ந.ஆனந்த் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் எஸ்.முத்தையா ஆகியோர் கட்சித் தொண்டர்களுடன் இருசக்கர வாகனம், மற்றும் பிரசார வாகனங்களில் சென்று வாக்குச் சேகரித்தனர்.
அதேபோல் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் அ.சங்கர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பி.ஹேமலதா, முக்குலத்தோர் தேவர் புலிப்படைத் நிறுவனத் தலைவர் கே.பாண்டித்துரை ஆகியோரும் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.