ராமநாதபுரம் நகரில் வண்டிக்காரத் தெரு உள்ளிட்ட சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு திடீர் தீடீரென ஏற்பட்ட மின்தடையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை மாலை நிறைவடைந்த நிலையில், வண்டிக்காரத் தெரு உள்ளிட்ட சில பகுதிகளில் திடீரென மின்தடை ஏற்பட்டது. மாலை 5 மணி முதல் ஏற்பட்ட மின்தடையானது இரவு வரை அடிக்கடி ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் மின்தடையானது 10 நிமிடங்கள் முதல் 15 நிமிடங்கள் வரை நீடித்தது. தேர்தலில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்கும் வகையில் தீவிர ரோந்துப் பணியை காவல்துறையினரும், சிறப்பு கண்காணிப்புப் பிரிவினரும் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் திடீர், திடீரென மின்தடை ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மின்கம்பியில் பறவை மோதியதில் மின்தடை ஏற்பட்டது.
செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதலே இப்பிரச்னையால் மின்தடை அவ்வப்போது ஏற்பட்டுள்ளது. அதை சீராக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.