கமுதி அருகே சுவாமி கும்பிடுவதில் ஏற்பட்ட தகராறில் 8 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனர்.
கமுதி அருகே கோவிலாங்குளத்தில் உள்ள அழகியவள்ளியம்மன் கோயிலில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனை முன்னிட்டு கோவிலாங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சிறப்பு பூஜையில் கலந்து அம்மனை வழிபட காத்திருந்தனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த வழிவிட்டான் மகன் முத்தரசு(37) கோயில் பூசாரியிடம் விரைவில் தீபாராதனை காட்டும் படி கூறியதாகவும், இதில் ஆத்திரம் அடைந்த அழகுதேவர் மகன் காந்தி, இவரது மகன்கள் காளிசரவணன், அழகுசரவணன், இவரது உறவினர் சபரிநாதன் உள்பட 8 பேர் சேர்ந்து முத்தரசை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த முத்தரசு கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து காந்தி, காளிசரவணன், அழகுசரவணன், சபரிநாதன் உள்பட 8 பேர் மீது கோவிலாங்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.