திருவாடானை சினேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத் திருக்கல்யாண விழா திங்கள்கிழமை நடைபெற உள்ளது.
இக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவும் பல்லக்கு, கேடகம், வெள்ளி, ரிஷபம், அன்னம், கிளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை அம்பாள் தபசு கோலத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் திங்கள்கிழமை காலை 9.30மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை திவான் மற்றும் நிர்வாகச் செயலாளர் பழனிவேல் பாண்டியன், சரகப் பொறுப்பாளர் புவனேஸ்வர் குமார் மற்றும் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.