ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் மது அருந்தி இருந்ததால் பொதுமக்களின் புகார் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் அன்புச்செழியன் என்வவர் காரைக்குடி மண்டல அரசுப் பேருந்தை ராமேசுவரத்திலிருந்து மதுரை நோக்கி இயக்கிவந்துள்ளார். பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளார்.
அந்தப் பேருந்தை ராமேசுவரத்திலிருந்து தாறுமாறாக இயக்கி உள்ளார் ஓட்டுநர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் பேருந்து நடத்துநர் சக்திவேலிடம் பேருந்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர். ஆனால் பேருந்தை நிறுத்தாமல் பயணிகளை ஓட்டுநரும், நடத்துநரும் அவதூறாகப் பேசியுள்ளனர்.
இந்நிலையில் அப்பேருந்து பரமக்குடி பேருந்து நிலையம் வந்தவுடன், பேருந்திலிருந்த பயணிகள் அங்குள்ள புறக்காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஓட்டுநரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் மது அருந்தி பேருந்தை இயக்கியது தெரியவந்தது. இதையடுத்து ஓட்டுநர் அன்புச்செழியனை போலீஸார் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்தனர். மேலும் அவர் மீது பரமக்குடி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.