பரமக்குடி நகராட்சி பகுதியில் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரிவதற்காக தரைமட்டத்தில் வைக்கப்பட்டுள்ள மின்பெட்டிகளை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டுகளிலும் தெருவிளக்குகள் எரிவதற்காக ஆங்காங்கே பல்வேறு இடங்களில் மின் கம்பங்களில் மின் இணைப்பு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இரவு நேரங்களில் தெரு விளக்குகள் எரியவிடப்படுகின்றன.
இவ்வாறு வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான பெட்டிகள் மின் கம்பங்களின் அடிப்பகுதியில் தரையை ஒட்டி வைத்துள்ளனர். இவ்வழியாகச் செல்லும் வாகனங்கள் அவ்வப்போது இப்பெட்டிகளில் இடித்து விடுகின்றன. நகரில் 12-ஆவது வார்டு எஸ்.எஸ்.கோவில் தெரு, பங்களா ரோடு, தெற்கு பள்ளிவாசல் தெரு, எமனேசுவரம் உள்பட பல்வேறு இடங்களில் மின் இணைப்பு பெட்டிகள் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன. எஸ்.எஸ்.கோவில் தெருவில் இதுபோன்றுள்ள மின் இணைப்புப் பெட்டியை கடந்தே தனியார் மற்றும் தொடக்கப் பள்ளிக்கு குழந்தைகள் செல்கின்றனர். மேலும் தனியார் மருத்துவமனைகளும் இப்பகுதியிலே உள்ளதால் பெரும்பாலான வாகனங்கள் ஆபத்தை உணராமல் இம்மின்கம்பம் அருகிலேயே நிறுத்தப்படுகின்றன. மேலும் மழை நேரங்களில் இதுபோன்று அமைக்கப்பட்டுள்ள மின் இணைப்பு பெட்டிகளில் மழைநீர் தேங்கி மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. இதனை மாற்றியமைக்க வேண்டும் என பொதுமக்கள் புகார் தெரிவித்தும், நகராட்சி நிர்வாகமும், மின்வாரியத்தினரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என கூறுகின்றனர்.
பெரும் விபத்து ஏற்படும் முன்னர் ஆபத்தான நிலையில் உள்ள மின் இணைப்பு பெட்டிகளை பாதுகாப்பான இடங்களில் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.