ராமநாதபுரம் நகராட்சியில் மக்கள் தொகை அடிப்படையில் நிரந்தர துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தி ஏஐடியுசி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகராட்சி அலுவலகம் முன் ராமநாதபுரம் மாவட்ட உள்ளாட்சி பணியாளர்கள் சங்கம் (ஏஐடியுசி) நகர் கிளை சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளைத் தலைவர் கே.பாலு தலைமை வகித்தார். செயலர் எம்.முருகேசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்டச் செயலர் பி.எல்.ராமச்சந்திரன் பேசினார். மாவட்டத் தலைவர் மீனாள் சேதுராமன் வாழ்த்திப் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ராமநாதபுரம் நகராட்சியில் தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் 400 துப்புரவுப் பணியாளர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு சம வேலை, சம ஊதியம் முறையை செயல்படுத்த வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் புதிய பணியாளர்களை நியமித்து மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து அப்புறப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
முன்னதாக ஏஐடியுசி கொடியை நகராட்சி முன்புறமுள்ள கொடி மரத்தில், மாவட்டத் தலைவர் மீனாள் சேதுராமன் ஏற்றி வைத்தார். இதில் கிளைப் பொருளாளர் ராமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.