ராமநாதபுரத்தில் வாகனம் உரசிய தகராறில் பணம், கைப்பேசியை பறித்ததாக 2 பேர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
ராமநாதபுரம் மகாத்மா காந்திநகர் 7 ஆவது தெருவைச் சேர்ந்தவர் முகமதுயூசுப்அலி ((27). இவர் திங்கள்கிழமை இரவு தனது காரில் பட்டினம்காத்தான் ஹாக்கி மைதானம் பகுதியில் உள்ள சாலையில் வந்த போது, வேறு காரில் இருவர் வந்துள்ளனர்.
அப்போது இரு வாகனங்களும் உரசிக்கொண்டதால், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வாக்கு வாதத்தில் ஈடுபட்டவர்கள் முகமதுயூசுப் அலி வாகனத்தின் சாவியை பறித்துக் கொண்டதுடன், அவர் வைத்திருந்த ரூ.38 ஆயிரம் மற்றும் செல்லிடப்பேசியையும் பறித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா அறிவுறுத்தலின் பேரில் கேணிக்கரை போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.
மேலும், முகமதுயூசுப் அலியின் வாகனச் சாவியை மீட்டு அவரிடம் கொடுத்தனர். இதுதொடர்பாக பணம், செல்லிடப்பேசியை பறித்ததாக 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.