ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு விசைப்படகுடன் 7 மீனவர்களை செவ்வாய்க்கிழமை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.
ராமேசுவரத்தில் இருந்து திங்கள்கிழமை 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர். இதனையடுத்து, ஒரு விசைப்படகை சிறைபிடித்த கடற்படையினர் படகில் இருந்த 7 மீனவர்களை கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு செவ்வாய்க்கிழமை அழைத்து சென்றனர். மேலும் படகையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட படகு உரிமையாளர் கிகிங்கர் (45), வில்லர் (48), நெல்சன் (27), இன்னாசி உள்ளிட்ட 7 மீனவர்களை யாழ்பாணம் நீரியல்துறையிடம் ஒப்படைத்தனர். அங்கு மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்கு பின் நீதிபதி, வீட்டில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறைக் காற்று காரணமாக கடந்த 12 நாள்களுக்குப் பிறகு மீன்பிடிக்கச் சென்ற 7 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.