ராமநாதபுரம் அருகேயுள்ள அரசு அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆட்சியர் கொ.வீரராகவராவ் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வை மேற்கொண்டார்.
ராமநாதபுரம் ஒன்றியம் வெண்ணத்தூர் கிராமத்தில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை பார்வையிடுவதற்காக ஆட்சியர் கொ.வீரராகவராவ் சென்றார். அப்போது அவ்வழியில் இருந்த நாரணமங்களம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை அவர் பார்வையிட்டார்.
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் வகுப்பறைகள் மற்றும் முதல் வகுப்பு குழந்தைகளிடம் பாடம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் கழிப்பறையைச் சென்று பார்வையிட்டார். ஹாஸ்பிடாஸ் மேற்கூரையுடன் போதிய பராமரிப்பின்றி இருந்த அந்த கழிப்பறையை சீரமைக்க அவர் உத்தரவிட்டார்.
பின்னர் அங்கிருந்த அங்கன்வாடி மையத்துக்குச் சென்ற ஆட்சியர், உணவுப் பொருள்கள் இருப்பு குறித்தும், குழந்தைகள் விவரம், அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும் கேட்டறிந்தார்.