முதுகுளத்தூர் ஸ்ரீ வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயிலில் 43-ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு புதன்கிழமை 2 ஆயிரம் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக் கடனை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் சுப்பிரமணியர் ஆலயத்தில் இருந்து பூசாரி வெங்கடேசன் தலைமையில் பக்தர்கள் 2 ஆயிரம் பால்குடம் எடுத்து வந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு தலைவர் எஸ்.வடமலையான், செயலர் எம்.ராமலிங்கம், பொருளாளர் கே.பெருமாள், துணைத் தலைவர் எஸ்.ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீவடக்கு வாசல் செல்லி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக முதுகுளத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்குவதற்கும், பால்குடம், அக்னிசட்டி எடுப்பதற்கும், ஆடி முதல் தேதியில் இருந்து காப்பு கட்டி, மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர். இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து இரவில் அம்மன் பஜனை பாடல்கள் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள், மழலையர் பட்டிமன்றம், வரலாற்று சிறப்பு மிக்க நாடகம், பொது அன்னதானம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.