ராமநாதபுரம் நகரில் கொத்தனாரை முன்விரோதத்தில் கத்தியால் குத்திய பெயிண்டரை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் நகர் கண்ணன் கோவில் பின்புறம் உள்ள புளிக்காரத் தெருவைச் சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவரது மகன் ராஜா (38). கொத்தனார். இவருக்கும் ராமநாதபுரம் பசும்பொன்நகரைச் சேர்ந்த பெயிண்டர் சரவணன் (45) என்பவருக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு அரசு மதுபானக்கடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறைத் தொடர்ந்து ராஜா வெளியூர் சென்றுவிட்டு சமீபத்தில்தான் ராமநாதபுரம் வந்துள்ளார். இந்தநிலையில் திங்கள்கிழமை காலை ஆசாரி தெரு பூங்கா அருகே அவர் நின்றுகொண்டிருந்தபோது அங்கே வந்த சரவணன் திடீரென தான் வைத்திருந்த கத்தியால் ராஜாவைக் குத்தினாராம்.
இதில் முதுகுப்பகுதி, வயிறு, கை உள்ளிட்டவற்றில் பலத்த காயமடைந்த ராஜாவை அங்கிருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். கவலைக்கிடமான நிலையில், அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து ராஜாவின் தாய் மீனாட்சி அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிந்து சரவணனைக் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.