ராமநாதபுரம் அருகே தெற்குத்தரவையில் தொடர்ந்து நடைபெறும் வழிப்பறிச் சம்பவங்களைத் தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் சார்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தெற்குத்தரவை பகுதியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் கடந்த சில வாரங்களாதத் தொடர்ந்து வழிப்பறிச் சம்பவங்கள் நடந்துவருகின்றன. இதுதொடர்பாக கேணிக்கரைப் போலீஸார் பல வழக்குகளைப் பதிந்து 2 பேரை மட்டும் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே தெற்குத்தரவை, காலனி, சுப்புத்தேவன்வலசை, அம்மன்கோவில், ஆண்டித்தேவன் வலசை, கொட்டியக்காரன் வலசை, சங்கம் வலசை, துவரயன்வலசை, சின்னாண்டி வலசை, வைரவன்கோவில் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனர்.
தெற்குத்தரவை கோவிந்தன், செய்யதுமுகம்மது ஆகியோர் தலைமையில் வந்த குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தெற்குத் தரவை கிராமப் பகுதியிலிருந்து அனைத்து தேவைகளுக்கும் பொதுமக்கள் ராமநாதபுரத்துக்கே வந்து செல்லும் நிலை உள்ளது. இந்தநிலையில், கீழக்கரை பெருவழிச்சாலையில் சமூக விரோதிகள் சிலர் பொதுமக்களை வழிமறித்து பணம் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு தாக்குகின்றனர். இதுபோன்ற பல வழிப்பறிச் சம்பவங்கள் தெற்குத் தரவை ஆர்.எஸ்.மடை கலுங்கு மற்றும் பேருந்து நிறுத்தத்துக்கு இடையேதான் இரவு 8 மணி முதல் இரவு 11 மணிக்குள்ளேயே நடந்துவருகின்றன. இதனால், அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட தனியாக யாரும் அப்பகுதியில் செல்லமுடியாத நிலையே ஏற்பட்டுள்ளது.
ஆகவே தெற்குத் தரவை உள்ளிட்ட பகுதி மக்களின் பயமற்ற பயணத்தை உறுதி செய்யும் வகையில் தெற்குத் தரவை விலக்கில் சோதனைச் சாவடி அமைக்கவேண்டும். உயர்கோபுர மின்விளக்கு அமைக்கவேண்டும். காவல்துறை ரோந்துப் பணியை தீவிரப்படுத்தவேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.