ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திருமணமான 2 மாதங்களில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பரமக்குடி நேரு நகரைச் சேர்ந்த சந்திரசேகர் மகள் ஜெயபிரபா (24). இவருக்கும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆலைத் தொழிலாளியான சண்முகசுந்தரம் என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஜெயபிரபா அவரது தாயாருடன் பரமக்குடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். அன்று இரவு 11 மணியளவில் வீட்டில் படுத்திருந்த ஜெயபிரபா திடீரென வந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். உறவினர்கள் விசாரித்தபோது, விஷம் குடித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து ஜெயபிரபா பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தகவலறிந்து மருத்துவமனைக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் பொறுப்பு ராஜேஸ்வரன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
இச்சம்பவம் குறித்து பரமக்குடி நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் கோட்டாட்சியர் சு.ராமன் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.