ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமிக்கக்கோரி திமுகவினர் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம் தாலுகா மருத்துவமனையில் நாள் தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளி நோயாளிகளாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் மருத்துவமனையில், உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் குறைவாக உள்ளது. இரவு நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் இரவு நேரத்தில் சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் கிசிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தாலுகா அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அடிப்படை வசதிகள் செய்திட வலியுறுத்தி நகர் திமுக சார்பில் என்.எஸ்.கே. வீதியில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நகர் கழக பொறுப்பாளர் நாசர்கான் தலைமை வகித்தார். முன்னாள் நகர் கழக செயலாளர் ஏ.ஜான்பாய் முன்னிலை வகித்தார். வில்லாயுதம், ஏகே.என்.சண்முகம், சுந்தரராஜன்,பாண்டி,வெங்கடேஷ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.