ராமேசுவரம் அருகே கோதண்டராமர் ஆலயத்தின் பூட்டை உடைத்து உண்டியலில் உள்ள பணம் மற்றும் அப்பகுதியில் இருந்த கடைகளை உடைத்து ரூ. 10 ஆயிரம் மற்றும் பொருள்களை மர்ம நபர்கள் வியாழக்கிழமை இரவு திருடிச் சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலின் உப கோயிலான தோண்டராமர் ஆலயம் தனுஷ்கோடி செல்லும் வழியில் அமைந்துள்ளது. வியாழக்கிழமை இரவு வழக்கம் போல பூசாரி கோயிலை அடைத்து விட்டு சென்று விட்டார்.
வெள்ளிக்கிழமை காலையில் கோயிலை திறக்கச் சென்ற போது பூட்டு உடைக்கப்பட்டு கோயில் கதவு திறந்திருப்பதை கண்டவுடன் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பூசாரி தனுஷ்கோடி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது கோயில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணம் மற்றும் பூஜைப் பொருள்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
மேலும் கோயில் அருகே உள்ள 4 கடைகளை உடைத்து ரூ. 10 ஆயிரம், குளிர்பானங்கள் மற்றும் உணவுப் பொருள்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் கோதண்டராமர் ஆலயத்தில் சோலர் மின் திட்டத்தை பயன்படுத்தி மின் இணைப்பு மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இரவு நேரத்தில் பாதுகாப்பு பணிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் காவலாளி பணியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.