ராமநாதபுரம் மாவட்டத்தில் கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு இரண்டாவது நாளாக சனிக்கிழமை 80-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்ணன் கோயில்களில் உறியடி விழா நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 189 இடங்களுக்கும் மேலாக கிருஷ்ண ஜயந்தி விழா நடைபெற்றது. ராமநாதபுரம் நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் கண்ணன், கிருஷ்ணர் கோயில்களில் பாலாபிஷேகம், உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் என திருவிழா களைகட்டியது.
இந்நிலையில், இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் விழா கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் நகரில் புத்தேந்தல், அச்சுதன்வயல், இடையர்வலசை, வனசங்கரி அம்மன்கோயில் தெரு உள்ளிட்ட இடங்களிலும் தேவிபட்டிணம், கேணிக்கரை என 13 இடங்களில் உறியடித்திருவிழா நடத்தப்பட்டது.
பரமக்குடி, எமனேஸ்வரம், பார்த்திபனூர் ஆகிய பகுதிகளில் 31 இடங்களிலும், ராமேசுவரம், உச்சிப்புளி உள்ளிட்ட 4 இடங்களிலும் கடலாடி பகுதியில் கிருஷ்ணாபுரம், கீழக்கரை, ஏர்வாடி கொம்பூதி உள்ளிட்ட34 இடங்களிலும் உறியடி நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.
உறியடித் திருவிழாவுடன் வழுக்கு மரம் ஏறுதல், குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் என பெரும்பாலான கிராமங்களில் கிருஷ்ண ஜயந்தி விழா சனிக்கிழமையும் கொண்டாடப்பட்டது. இதற்காக கொம்பூதி உள்ளிட்ட இடங்களுக்கு ராமநாதபுரம் நகர் பகுதிகளில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.