ராமேசுவரத்தில் 2 ஆவது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்து மழைபெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது.
ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் வெள்ளிக்கிழமை தொடங்கிய மழை 2 ஆவது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்து பெய்தது. இதனால் ராமேசுவரம், பாம்பன் குந்துகால்,சின்னப்பாலம், நடராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீா் குளம் போல தேங்கியது. தொடா் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
இதனைத் தொடா்ந்து, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகு மீனவா்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்துள்ளதால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோழியகுடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 1800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 50 ஆயிரம் மீனவா்கள் பாதிப்பு அடைந்துள்ளனா். மேலும் இரண்டு நாள்கள் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மீனவா்கள் மீன்பிடிக்க செல்லாமல் முடங்கியுள்ளனா். மேலும் பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் வழக்கத்தை விட அதிகளவில் சூறைக்காற்று வீசுவதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.