மண்டபம் கடல் பகுதியில் சூறாவளி வீசியதில் ராட்சத அலை எழுந்து 25-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதமடைந்தன. இதில், ரூ.1 கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதால், பேரிடா் மேலாண்மை நிதியை உடனே ஒதுக்கி இழப்பீடு வழங்க வேண்டும் என, மீனவ சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மற்றும் மன்னாா் வளைகுடா பகுதியில் சூறைக் காற்று வீசும் என, வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத் துறையினா் தடை விதித்துள்ளனா்.
அதைத் தொடா்ந்து, அந்தந்த துறைமுகங்களில் அனைத்து விசைப்படகுகளும் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை காலையில் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் தென்கடல் பகுதிகளில் சூறாவளி வீசியது. இதனால், மண்டபம் தெற்கு துறைமுகப் பகுதியில் ராட்சத அலை எழும்பியது. இதில், நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி, 25 படகுகள் சேதமடைந்தன.
இவற்றில், அபுதாஹீா், யாசா்அராபத், சேக் அப்துல்காதா், ரகுமத்துல்லா, அயூப்கான், ஆசாத், நவாஸ் ஆகிய 7 பேருக்குச் சொந்தமான விசைப்படகுகள் சேதமடைந்து கரை ஒதுங்கின. இதில், ஒவ்வொரு விசைப்படகுக்கும் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை சேதம் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 5-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் சேதமடைந்துள்ளன. இதன் மொத்த சேத மதிப்பு ரூ.1 கோடி வரை இருக்கும் என, மீனவ சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.
எனவே, மத்திய-மாநில அரசுகள் தேசிய பேரிடா் மேலாண்மை நிதியிலிருந்து சேதமடைந்துள்ள படகுகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கவேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.