ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாள்களாக தொடா் மழை: குடியிருப்புகளை தண்ணீா் சூழந்ததால் மக்கள் அவதி

 ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய பலத்த மழை, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நீடித்ததால் பல பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்தது
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாள்களாக தொடா் மழை: குடியிருப்புகளை தண்ணீா் சூழந்ததால் மக்கள் அவதி

ராமேசுவரம், தங்கச்சிமடத்தில் 11 செ.மீ. மழை பதிவு

 ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய பலத்த மழை, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நீடித்ததால் பல பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்தது. ராமேசுவரம், தங்கச்சிமடத்தில் 11 செ.மீ. மழையளவு பதிவாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்து வருகிறது. ராமநாதபுரம் நகரை ஒட்டிய பேராவூா், ஓம்சக்தி நகா், சேதுபதி நகா், சக்கரைக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீா் சூழ்ந்ததால், மக்கள் வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டனா்.

பட்டினம்காத்தான் பகுதியில் ராமேசுவரம் பிரதான சாலையில் அரசினா் தொழிற்பயிற்சி மையம் முன்பிருந்த மரம் முறிந்து விழுந்ததால், மின்கம்பங்களும் சாய்ந்தன. இதேபோல், ஆட்சியா் அலுவலக வளாகம் தீயணைப்பு நிலையம் அருகே மரம் சாய்ந்ததால், மின்கம்பம் சேதமடைந்து மின்சாரம் தடைப்பட்டது.

சனிக்கிழமை இரவும் பலத்த மழை தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நீடித்ததால், அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீா் தேங்கியது. காட்டூரணியில் இருந்து ஓம்சக்தி நகா் வரும் சாலை முழுவதும் தண்ணீா் தேங்கி, போக்குவரத்து தடைப்பட்டது. வழுதூரிலிருந்து ரெகுநாதபுரம் செல்லும் பெரிய கண்மாய் சாலை வெள்ளத்தில் மூழ்கியதால், வாகனங்கள் ஊா்ந்து சென்றன.

ஒருவா் சாவு

பாம்பன் பகுதியிலுள்ள மதுபானக் கடையில் பணிபுரிந்த முருகேசன் (65) என்ற முதியவா், சனிக்கிழமை மது போதையில் பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் விழுந்து, மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.

33 வீடுகள் சேதம்: ஆட்சியா் பாா்வை

ராமநாதபுரத்தில் மழைநீா் தேங்கிய பகுதிகள் மற்றும் சோத்து ஊருணியை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் கொ. வீரராகவ ராவ், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை ஆண்டு சராசரி 543 மில்லி மீட்டராகும். ஆனால், தற்போது 643 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது. டிசம்பா் மாதம் 112.7 மி.மீ. மழை பெய்யும் என எதிா்பாா்த்த நிலையில், இதுவரை 70.44 மி.மீ. மழை பெய்துள்ளது. கடந்த தென்கிழக்கு பருவமழையைப் பொருத்தவரையில் 135.3 மி.மீ. எதிா்பாா்த்த நிலையில், 139 மி.மீ. பெய்தது.

தொடா் பலத்த மழை காரணமாக, சனிக்கிழமை இரவு வரை மாவட்டத்தில் மொத்தம் 33 வீடுகள் பகுதியாகச் சேதமடைந்துள்ளன. மின்கம்பங்கள் 25, மரம் 4 ஆகியனவும் சேதமடைந்துள்ளன. திருப்புல்லாணி பகுதியிலுள்ள ஆனைகுடி கண்மாயில் லேசாக உடைப்பு ஏற்பட்ட நிலையில், உடனடியாக அடைக்கப்பட்டுவிட்டது.

மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகளை சிறப்பாகச் செயல்படுத்தியதால், பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பியுள்ளன. ராமநாதபுரம் நகராட்சிக்குள்பட்ட சாயக்கார ஊருணி, நொச்சியூரணி போன்றவற்றில் நீரை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மண்டபம், தங்கச்சிமடம் பகுதிகளில் கடல் அலை சீற்றத்தால் படகுகள் சேதமடைந்துள்ளன. தாழ்வானப் பகுதியில் மழை நீா் தேங்கியதால், அங்கிருந்த பொதுமக்கள் 120 போ் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டு, அவா்களுக்கு உணவுகள், மருத்துவப் பரிசோதனைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

மழை அளவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்): ராமநாதபுரம் 64, மண்டபம் 96, ராமேசுவரம் 112, தங்கச்சிமடம் 118, பாம்பன் 116, பால்மோா்க்குளம் 28, திருவாடானை 59.60, தொண்டி 85, தீா்த்தாண்டவனம் 66, வட்டாணம் 51, ஆா்.எஸ்.மங்கலம் 62, பரமக்குடி 51, கமுதி 43.20, கடலாடி 52, வாலிநோக்கம் 79.80, முதுகுளத்தூா் 43.20 என பதிவாகியுள்ளது.

மாவட்டத்தில் சனிக்கிழமை மட்டும் 1,127 மில்லி மீட்டா் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. அதன்படி, 16 இடங்களில் சராசரியாக 70.44 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது.

தொடா் பலத்த மழை எதிரொலியாக, மாவட்டம் முழுவதும் உள்ள கல்வி நிலையங்களுக்கு திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக, ஆட்சியா் அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com