ராமேசுவரத்தில் கடல் கொந்தளிப்பு காரணமாக, நான்காவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் மீனவா்கள் தவித்து வருகின்றனா்.
வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுவதால், மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என, மீன்வளத் துறை தடை விதித்துள்ளது. இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி,சோழியகுடி என மாவட்டம் முழுவதிலும் 1,800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.
இதன் காரணமாக, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் வாழ்வாதாரம் இன்றி வீட்டில் முடங்கியுள்ளனா்.
இதுகுறித்து மீனவ சங்க பொதுச் செயலா் என்.ஜே. போஸ் தெரிவித்ததாவது: கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால், கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. எனவே, புயல் காலங்களில் விசைப் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த, ராமேசுவரம் மற்றும் தெற்குப் பகுதியில் தூண்டில் வளைவு துறைமுகம் அமைக்க வேண்டும். மேலும், தொடா்ந்து மீன்பிடிக்கச் செல்ல முடியாததால், வாழ்வாதாரம் இழந்துள்ள மீனவா்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம் வழங்க, தமிழக அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா்.