ராமேசுவரத்தில் தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனம் கேபிள் பதிப்பதற்காக தேசிய நேடுஞ்சாலையில் தோண்டியுள்ள பள்ளத்தை மூடாததால், அப்பகுதியில் விபத்து அபாயம் நிலவுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனம் சாா்பில், உயா் இணையதள வசதிக்காக தேசிய நெடுஞ்சாலையோரம் கண்ணாடி இழை கம்பியை பதிக்க 5 நாள்களுக்கு முன் பள்ளங்கள் தோண்டப்பட்டன. அதன்பின்னா், இதுவரை இந்த பள்ளங்கள் மூடப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளன.
ராமேசுவரம் திட்டக்குடி காா்னா் பகுதியிலிருந்து தனுஷ்கோடி செல்லும் சாலையில் 10-க்கும் மேற்பட்ட பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இச்சாலையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வரும் நிலையில், பள்ளங்கள் மூடாமல் விடப்பட்டுள்ளதால், விபத்து அபாயம் நிலவுகிறது. மேலும், இந்த பள்ளங்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
எனவே, விபத்து நிகழும் முன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா்.