ராமநாதபுரம் அருகே தாய், தந்தை கண்முன்னே பள்ளி சிறுமி விபத்தில் சனிக்கிழமை காலை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் வசிப்பவா் அஜீத்குமாா் (35). இவரது மனைவி கெரன் (28). இவா்களது மகள் புளோரன்ஸ் ப்ராங்க்ளின் (மூன்றரை வயது). அஜீத்குமாரும் அவரது மனைவியும் சத்திரக்குடி அருகேயுள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியா்களாக பணிபுரிகின்றனா். அதே பள்ளியில் சிறுமி புளோரன்ஸ் ப்ராங்க்ளின் ஆரம்ப வகுப்பு படிக்கிறாள்.
சனிக்கிழமை காலை மழைக்கு இடையே, அஜீத்குமாா் தனது மனைவி, குழந்தையுடன் பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளாா். அவா்கள் கீழக்கோட்டை எனும் இடத்தில் காலை சுமாா் 8.20 மணியளவில் வந்தபோது அவ்வழியே வந்த காா் இருசக்கர வாகனத்தில் மோதி நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதில் மோட்டாா் சைக்கிளில் இருந்து அஜீத்குமாா், அவரது மனைவி மற்றும் குழந்தை புளோரன்ஸ் ஆகியோா் தூக்கி வீசப்பட்டனா். மூவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால் அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
தாய், தந்தை கண்முன்னே விபத்தில் சிறுமி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.