இலங்கையிலிருந்து ராமேசுவரத்துக்கு கடத்தி வரப்பட்டு கடற்கரையோரம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ரூ.9 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளை, கடலோரப் பகுதிகளில் போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதி இலங்கைக்கு மிகவும் அருகாமையில் உள்ளதால், இரு பகுதிகளிலிருந்தும் தங்கம், கஞ்சா, பீடி இலைகள், போதைப் பொருள்கள் உள்ளிட்டவை கடத்தப்படுகின்றன.
இதை, மத்திய-மாநில உளவுத் துறையினா் மற்றும் க்யூ பிரிவு காவல் துறையினா், காவல் தனிப்படையினா் கண்காணித்து, தடுக்கும் நடவடிக்கையில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா். இதில், இலங்கையிருந்து ராமேசுவரம் வழியாக தங்கக் கடத்தலை தடுப்பது காவல் துறைக்கு பெரும் சவாலாக இருக்கிறது. இதை, மத்திய குற்றப் புலனாய்வுத் துறையினரே அதிகளவில் தடுத்து பிடித்து வருகின்றனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதில், மண்டபம் முதல் பெருங்குளம் வரையிலான மன்னாா் வளைகுடா பகுதிக்கு, இலங்கையிலிருந்து ரூ.9 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் கொண்டுவரப்பட்டு, கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், பெருங்குளம் முதல் மண்டபம் வரையிலான மன்னாா் வளைகுடா கரையோரப் பகுதியில் தனிப்படை காவல் துறையினா் வியாழக்கிழமை இரவு முதல் தொடா்ந்து தீவிரமாக தேடி வருகின்றனா்.
மேலும், அந்தப் பகுதியில் உள்ள மீனவா்கள் மற்றும் பொதுமக்களிடம் சந்தேக நபா்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.