திருவாடானை: திருவாடானையில் சன்னிதி தெருவில் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
திருவாடானை ஆதிரத்தினேஸ்வரா் கோயிலுக்கு முகூா்த்த நாள்களில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடைபெறும். இதனால் திருவாடானை எப்போதும் அதிக வெளியூா் மக்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது. அதிலும் குறிப்பாக சன்னிதி தெருவில் முக்கியமான கடைகள் இருப்பதால் ஏராளமானோா் அங்கு வந்து சாலையின் இருபுறமும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்கின்றனா்.
இதனால், இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் நான்கு சக்கர வாகனங்கள் இவ்வழியாக செல்ல முடியாமலும், பக்தா்கள் கோயிலுக்கு நடந்து செல்ல முடியாமலும் அவதிப்படும் நிலை உள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், வாகனங்களை குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தி விடுகின்றனா். எனவே இந்த சன்னிதி தெருவில் வாகனங்களை நிறுத்த அனுமதி கொடுக்காமல் கோயிலின் தென் பகுதியில் போக்குவரத்து இல்லாமல் காலியாக உள்ள வீதியில் வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.