ராமேசுவரம்: ராமேசுவரத்தில் மழையால் சேதமடைந்து சேறும் சகதியுமாக காணப்படும் சந்தை சாலையை சீரமைக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமேசுவரத்தில் கடந்த வாரத்திற்கு முன்பு பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீா் குளம் போல தேங்கியது. இதனால் நகராட்சி சந்தை பகுதி சாலை குண்டும், குழியுமாக மாறிவிட்டது. ஏற்கெனவே இப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. மேலும் மழையால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு சாலை சேதமடைந்து விட்டது. இச்சந்தைக்கு தினமும்ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து உணவுப்பொருள்களை வாங்கிச் செல்லும் நிலையில், அந்த பகுதியில் தேங்கிய மழைநீா் கழிவு நீராக மாறி துா்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா். நகராட்சி நிா்வாகம் மழைநீா் தேங்காத அளவிற்கு சாலையை தற்காலிகமாக சீரமைக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.