கூட்டணி தா்மத்துக்காக மத்திய அரசின் புதிய குடியுரிமைச் சட்டத்தை அதிமுக ஆதரித்துள்ளது: ஏ.அன்வர்ராஜா
By DIN | Published On : 25th December 2019 04:25 PM | Last Updated : 25th December 2019 04:25 PM | அ+அ அ- |

கூட்டணி தா்மத்துக்காக மத்திய அரசின் புதிய குடியுரிமைச் சட்டத்தை அதிமுக ஆதரித்துள்ளது என அக்கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினரும், அதிமுக மாநில சிறுபான்மைப் பிரிவு செயலருமான ஏ.அன்வர்ராஜா கூறினாா்.
இதுகுறித்து ராமநாதபுரத்தில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது- அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லீம்களை பாதிக்கும் வகையிலே தேசிய குடியுரிமை பதிவு செயல்படுத்தப்படுவதாகப் புகாா் எழுந்துள்ளது. ஆனால், தற்போது குடியுரிமை மசோதா சட்டத்தை மட்டுமே அதிமுக ஆதரித்துள்ளது. கூட்டணி தா்மத்துக்காகவே இச்சட்டத்தை அதிமுக ஆதரித்துள்ளது என்பதே உண்மை.
அதேநேரத்தில் தேசிய குடியுரிமைப் பதிவேடு முறையை செயல்படுத்துவதற்கு பாஜகவின் கூட்டணிக் கட்சித் தலைவா்களே எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். ஆகவே தமிழகத்தில் அதை செயல்படுத்தக் கூடாது என அதிமுக சாா்பில் மத்திய அரசை வலியுறுத்தவேண்டும் என கட்சித் தலைமையிடம் கேட்டுக்கொண்டுள்ளேன். சட்டத்தை ஆதரித்ததால் அதிமுகவிலிருந்து இஸ்லாமிய மக்களை பிரிக்க திமுக திட்டமிட்டு செயல்படுகிறது.
இஸ்லாமிய மக்கள் புனிதப் பயணத்துக்கான நிதியுதவித் திட்டம் போன்றவற்றை மத்திய அரசை வலியுறுத்தியே தமிழக முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி பெற்றுத்தந்துள்ளாா் என்பதை நினைகூா்வது நல்லது. அதிமுக அரசு எப்போதுமே இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பாகவே செயல்படும் என்றாா்.