ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பயிர்க் காப்பீடு வழங்கப்படுமா என விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கமுதி ஒன்றியத்தில் 18 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்பட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் உள்ளன. இதில் ஏக்கருக்கு ரூ.333 வீதம், கூட்டுறவு கடன் சங்கம், அரசு இ-சேவை மையம், மத்திய கூட்டுறவு வங்கிகளில் கடந்த 2017-18, 19 ஆண்டுகளுக்கான காப்பீட்டு தொகை செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகள் விண்ணப்பித்த நிலங்களில் நெல் பயிரிடப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து அதற்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விட்டன. மேலும் தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டும் தற்போது வரை 2 ஆண்டுகளுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக அமைச்சர், மாவட்ட ஆட்சியர், சட்டப் பேரவை உறுப்பினர் என அனைத்து தரப்பினரிடம் மனு அளித்தும், பல்வேறு போராட்டங்களையும் நடத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்கிடையில் 2017-18 ஆம் ஆண்டு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு ரூ.550 கோடி இழப்பீடு வழங்க, தமிழக அரசு தொகையை ஒதுக்கீடு செய்துள்ளதாக கடந்த ஜன.18 இல் அறிவிக்கப்பட்டது.
மேலும் அந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை 1 ரூபாய் கூட இழப்பீடு வழங்கப்பட வில்லை.
எனவே வரும் மக்களவைத்தேர்தல் அறிவிப்புக்கு முன் இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.