தேர்தல் அறிவிப்புக்கு முன் பயிர்க் காப்பீடு வழங்கப்படுமா? கமுதி விவசாயிகள் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பயிர்க் காப்பீடு வழங்கப்படுமா என விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பயிர்க் காப்பீடு வழங்கப்படுமா என விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 கமுதி ஒன்றியத்தில் 18 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்பட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் உள்ளன. இதில் ஏக்கருக்கு ரூ.333 வீதம், கூட்டுறவு கடன் சங்கம், அரசு இ-சேவை மையம், மத்திய கூட்டுறவு வங்கிகளில் கடந்த 2017-18, 19 ஆண்டுகளுக்கான காப்பீட்டு தொகை செலுத்தியுள்ளனர். 
இந்நிலையில் விவசாயிகள் விண்ணப்பித்த நிலங்களில் நெல் பயிரிடப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து அதற்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விட்டன.  மேலும் தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டும் தற்போது வரை 2 ஆண்டுகளுக்கான  இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.    
இது தொடர்பாக அமைச்சர், மாவட்ட ஆட்சியர், சட்டப் பேரவை உறுப்பினர்  என அனைத்து தரப்பினரிடம் மனு அளித்தும், பல்வேறு போராட்டங்களையும் நடத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்கிடையில் 2017-18 ஆம் ஆண்டு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு ரூ.550 கோடி இழப்பீடு வழங்க, தமிழக அரசு தொகையை ஒதுக்கீடு செய்துள்ளதாக கடந்த ஜன.18 இல் அறிவிக்கப்பட்டது.
மேலும் அந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை 1 ரூபாய் கூட இழப்பீடு வழங்கப்பட வில்லை. 
எனவே வரும் மக்களவைத்தேர்தல் அறிவிப்புக்கு முன் இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com