ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, ராமேசுவரத்தில் ஹிந்து, இஸ்லாமிய மக்கள் இணைந்து, அக்கினி தீர்த்தக் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை மலரஞ்சலி செலுத்தினர்.
அக்கினி தீர்த்தக் கரையில் வீரர்களின் படத்துக்கு முன் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, மோட்ச தீபத்துடன் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று உயிரிழந்த வீரர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி பூஜை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் பாஜக மாவட்டத் தலைவர் கே.முரளிதரன், சீதாராம்தாஸ்பாபா,விவேகானந்த குடில் சுவாமி பிரணவானந்தா, முஸ்லிம் ஜமாத் தலைவர் செய்யது, செயலாளர் டி.ஆவுல் அன்சாரி, வ.உ.சி. பேரவை தலைவர் வேடராஜன், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பேரன் சேக்சலீம், பிராமண சங்கத் தலைவர் சங்கரவாத்தியர், சிவசேனை மாவட்ட இளைஞரணி தலைவர் ஹரிதாஸ், யாத்திரை பணியாளர் சங்க செயலாளர் காளிதாஸ், சமூக ஆர்வலர் தில்லைபாக்கியம் பாஜக மாவட்டத் தலைவர் சாரதா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மானாமதுரையில்: மானாமதுரையில் சனிக்கிழமை இரவு மெழுகுவர்த்தி ஏற்றி, பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மானாமதுரை தேவர் சிலை, பேரூராட்சி அலுவலகப் பகுதி, பழைய பேருந்து நிலையம் பகுதி உள்ளிட்ட பல இடங்களில், சிஆர்பிஎஃப் வீரர்களின் உருவப்படங்களுக்கு பொதுமக்கள் மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். மேலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து, சுவரொட்டியும் ஒட்டப்பட்டிருந்தது.
சிவகங்கையில்: சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு, பாஜக நகரத் தலைவர் தனசேகரன் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டு, உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து, பயங்கரவாதத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்து ஏராளமானோர் பேசினர்.