கமுதி அருகே சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், 5 கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கமுதி அருகே சின்னக்கரிசல்குளத்திலிருந்து என்.கரிசல்குளம், தோப்புநத்தம் வழியாக கீழமுடி மன்னார் கோட்டைக்கு செல்லும் 8 கி.மீ தூரம் தார்ச்சாலையினை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் சாலையின் குறுக்கே 2 சிறு பாலங்கள், தடுப்புச் சுவர் அமைக்கும்பணி கடந்த 8 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இருந்த போதிலும் சாலை அமைக்கும் பணி மந்தமாக நடந்து வருகிறது.
இதனால் கீழமுடி மன்னார் கோட்டையில் இருந்து கமுதிக்கு 12 கி.மீ. தூரம் சுற்றி பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலை சீரமைப்புப் பணிகள் தொய்வாக நடப்பதால் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமல் 5 கிராம விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு என்.கரிசல்குளம் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.