முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் அரசுப் பணியாளர்களுக்கு நாளை விளையாட்டுப் போட்டிகள்
By DIN | Published On : 28th February 2019 07:57 AM | Last Updated : 28th February 2019 07:57 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்ட அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: 2018-2019 ஆம் ஆண்டு அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெறவுள்ளன. இருபாலர் இறகுப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், கபடி, மேசைப்பந்து, வாலிபால் மற்றும் ஆண்களுக்கான கால்பந்து போட்டிகளும் நடைபெறவுள்ளன.
போட்டியில் கலந்து கொள்வதற்கு வயது வரம்பு கிடையாது. போட்டியில் கலந்து கொள்ளும் அரசுப் பணியாளர்களுக்கு, ஒரு நாள் மட்டும் சிறப்பு தற்காலிக விடுப்பு வழங்கப்படும். போட்டியில் பங்கேற்போர் பணிபுரியும் சான்றுகளை போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் வழங்க வேண்டும்.
இந்த போட்டிகளில் காவல்துறை, ராணுவம், தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறையில் பணியாற்றும் சீருடைப் பணியாளர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. கல்வி நிறுவனங்கள் மற்றும் உடற்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பணியாளர்கள், விளையாட்டு அலுவலர், பயிற்றுநர்கள் பங்கேற்கலாம்.
அரசுத்துறைகளில் சில்லரைச் செலவினப் பணியாளர்கள், தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள், புதிதாக பணியில் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.