: பொங்கல் பண்டிகைக்கு வெளியூர்களுக்குச் செல்லும் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் ராமநாதபுரத்தில் இருந்து 12 புதிய பேருந்துகள் சனிக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன.
அரசு போக்குவரத்துக்கழகத்தின் 6 கிளைப் பணிமனைகள் ராமநாதபுரம் கோட்டத்தில் உள்ளன. அவற்றில் மொத்தம் 250-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. ஆனால், பெரும்பாலான பேருந்துகள் பழுதான நிலையில் இருப்பதாக புகார்கள் எழுந்தன.
இந்தநிலையில், சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக்கழக 6 கிளைகளுக்கும் 12 பேருந்துகள் வழங்கப்பட்டன.
புதிய பேருந்துகளின் தொடக்க நிகழ்ச்சி சனிக்கிழமை காலை ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன் புதிய பேருந்துகளைத் தொடக்கிவைத்தார்.
மேலும், பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட பயணிகளுக்காக வியாபாரிகள் சங்கத்தினர் அமைத்துத் தந்த அறிவிப்பு ஒலி பெருக்கி அமைப்பையும், கண்காணிப்பு கேமரா வசதியையும் அமைச்சர் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் போக்குவரத்துக்கழக ராமநாதபுரம் கோட்ட மேலாளர் எஸ்.சரவணன், உதவிப் பொதுமேலாளரசிங்காரவேலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடக்கிவைக்கப்பட்ட 12 பேருந்துகளில் மதுரை, நாகபட்டினத்துக்கு இடைநில்லா 4 பேருந்துகளும், சேலம், ராமேசுவரம், கோவை உள்ளிட்ட இடங்களுக்கு மீதிப் பேருந்துகளும் இயக்கப்படுவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறப்பு பேருந்துகள்: பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் சென்றவர்கள் திரும்ப வர வசதியாக வரும் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு 7 பேருந்துகளும், கோவைக்கு 5 பேருந்துகளும், மதுரைக்கு 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.