ராமநாதபுரம் கேணிக்கரை லெட்சுமிபுரம் ஊருணி மேலக்கரையில் மணி என்பவருக்கு சொந்தமான மாவு மில்லில் கதவை உடைத்து உள்ள புகுந்த மர்ம நபர்கள் ரூ.70 ஆயிரம் பணத்தை வியாழக்கிழமை திருடிச் சென்றனர். இதேபோல் அடுத்தடுத்துள்ள ஓய்வு பெற்ற ஆசிரியை கஸ்தூரி வீட்டில் ரூ. 10 ஆயிரம், ஓய்வு பெற்ற ஆசிரியர் முருகேசன் வீட்டில் ரூ.3ஆயிரம் மற்றும் அதனை அடுத்துள்ள வீட்டில் ரூ.15 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு, குறிவைத்து திருட்டு நடைபெற்று வருவதாகவும், மாவட்ட காவல்துறை ராமநாதபுரம் புற நகர் பகுதிகளில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் நடைபெற்ற தொடர் திருட்டு குறித்து கேணிக்கரை போலீஸார் சனிக்கிழமை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.