சுவாமி விவேகானந்தரின் 156 ஆவது ஆண்டு ஜயந்தியை முன்னிட்டு ராமநாதபுரத்தில் அவர் சொற்பொழிவாற்றிய இடத்தில் உள்ள நினைவு ஸ்தூபியில் சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஞானதீப சேவா சங்கம் மற்றும் சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவு ஸ்தூபி வார வழிபாட்டு மன்றத்தினர் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர் பி.கே.மணி, டாக்டர் மனோஜ்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்து மக்கள் கட்சியினர் முன்னிலை வகித்தனர். பூஜையின் போது ஸ்தூபியில் தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான மாணவ, மாணவியர், இளைஞர்கள் ஸ்தூபியின் அடியில் வைக்கப்பட்ட சுவாமி விவேகானந்தர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து வணங்கினர். பின்னர் பொங்கலிட்டு பூஜைகள் நடைபெற்றன. பூஜைக்கு வந்தவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் விநியோகிக்கப்பட்டது. இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த கண்ணதாசன், பாஜக மாவட்டச் செயலர் ஆத்மகார்த்தி, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கல்வி நிறுவனங்களில் விழா: ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடம் சார்பில் பள்ளி, கல்லூரிகளில் சுவாமி விவேகானந்தரின் ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது. நேஷனல் அகாதெமி, அமிர்தா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் ஜயந்தி விழாவை முன்னிட்டு மாணவ, மாணவியருக்குப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டி நிறைவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுதபானந்தர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.