ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆகம விதிகளை மீறி தீர்த்தங்களை மாற்றியதாகக் குற்றம் சாட்டி திமுகவினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இக் கோயிலில் 200 ஆண்டுகளுக்கு மேலாக கோயிலுக்குள் ஓம் வடிவில் இருந்து வந்த 22 புனித தீர்த்தங்களை, ஆகம விதிகளை மீறி, கோயில் நிர்வாகம் மாற்றியதாகக் குற்றம் சாட்டியும், ராமேசுவரம் நகராட்சியில் ஆளும் கட்சியினர் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி, நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் திமுக நகரச் செயலாளர் நாசர்கான் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, திமுகவினர் கண்ணில் கருப்பு துணி கட்டியும், சங்கு ஊதியும், கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஜீவானந்தம், நகர் திமுக பொறுப்புக் குழு நிர்வாகிகள் வில்லாயுதம், ஏ.கே.சண்முகம், எம்.எம்.கருப்பையா மற்றும் கார்க்கி ராம்குமார், மனோஸ்குமார், ராம்பிரசாத் உள்ளிட்ட 200-க்கு மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.