ராமநாதபுரத்தில் முன்விரோதம் காரணமாக செவ்வாய்க்கிழமை இளைஞர் ஒருவருக்கு கோடரி வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் நகர் காட்டுப்பிள்ளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி மகன் நவநீதகிருஷ்ணன் (25). இவருக்கும் அழகுநாச்சியார்கோயில் தெருவைச் சேர்ந்த கருணாமூர்த்திக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பொங்கலையொட்டி ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார் கோயில் தெரு பகுதியில் நவநீதகிருஷ்ணன் நண்பர்களுடன் நின்றிருந்த போது, அங்கு வந்த கருணாமூர்த்தி மற்றும் சிலர் அவரைக் கோடரி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினராம்.
இதனால் பலத்த காயமடைந்த நவநீதகிருஷ்ணன் ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
நவநீதிகிருஷ்ணன் தந்தை அழகர்சாமி அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்குப்பதிந்து கருணாமூர்த்தியை கைது செய்தனர். பெண் சம்பந்தமான பிரச்னையில் நவநீதகிருஷ்ணன் தாக்கப்பட்டாரா என விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.