ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் 4 வழிச்சாலைப் பகுதியில் புதன்கிழமை வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்தில் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
பார்த்திபனூர் அருகே எச்.பரளை கிராமத்தைச் சேர்ந்த சந்தியாகு மகன் செல்வராஜ் (45) நான்கு வழிச்சாலையின் ஓரமாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக மதுரை ஆண்டாள் புரம் பகுதியைச் சேர்ந்த கார்மேகம் மகன் ராமகிருஷ்ணன் என்பவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமுற்ற செல்வராஜ் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதுகுறித்து பார்த்திபனூர் காவல் நிலையத்தில் அவரது மனைவி சகுந்தலா அளித்த புகாரின் பேரில் போலீஸார் ராமகிருஷ்ணன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல் அழகன்பச்சேரி 4 வழிச்சாலைப் பகுதியில் மானாமதுரை கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த கட்டிமுகம்மது என்பவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் சாலையில் நடந்து சென்ற அழகன்பச்சேரியைச் சேர்ந்த கருப்பன் மகன் ஆதிமூலம் (51) என்பவர் பலத்த காயமடைந்தார். அதே போல் இருசக்கர வாகனத்தில் வந்த கட்டிமுகம்மதுவும் பலத்த காயமடைந்தார். காயமுற்ற இருவரும் ஆபத்தான நிலையில் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பார்த்திபனூர் காவல் நிலையத்தில் ஆதிமூலம் மகன் முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.