ராமநாதபுரத்தில் ஊருணியில் செவ்வாய்க்கிழமை குளித்துக் கொண்டிருந்த பெண்களை கேலி செய்தவர்களை தட்டிக் கேட்டவர் தாக்கப்பட்டார்.
ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட சிங்காரத்தோப்பு ஜான்சன்காலனி பகுதியில் ஊருணி உள்ளது. இதில் செவ்வாய்க்கிழமை காலை பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஐந்து பேர் கொண்ட கும்பல் பெண்களை கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த கும்பலை ஜான்சன் காலனியைச் சேர்ந்த அய்யாசாமி (45) கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அய்யாசாமி தாக்கப்பட்டு காயமடைந்தார். தகவலறிந்து ராமநாதபுரம் நகர் போலீஸார் விரைந்து வந்தனர். ஆனால், கும்பல் தப்பியோடிவிட்டது.
கும்பல் தாக்குதலில் காயமடைந்த அய்யாசாமி ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து நகர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.