பரமக்குடி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் பணம் மற்றும் செல்லிடப்பேசியை திருடிய பெண்ணை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
பரமக்குடி தேவராஜ் நகரைச் சேர்ந்த இளங்கோ மனைவி சரஸ்வதி(26). இவர் பரமக்குடி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நின்றிருந்தார். அப்போது சிவகங்கை மாவட்டம் மாரிமுத்து மனைவி அனுசியா (36) என்பவர் சரஸ்வதி வைத்திருந்த ஆயிரம் ரூபாய் ரொக்கம், செல்லிடப்பேசி ஆகியவற்றை திருடியுள்ளார். சிறிது நேரத்தில் பணம், செல்லிடப்பேசி ஆகியவை திருடு போனதை அறிந்த அவர் மற்றொருவர் செல்லிடப்பேசியிலிருந்து அழைத்துள்ளார். இதில் அருகில் நின்ற பெண்ணிடம் இருந்து சத்தம் வருவதை கண்ட அவர் இது குறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த போலீஸார் அனுசியாவிடம் சோதனை நடத்தியதில் அவரிடம் செல்லிடப்பேசி மற்றும் ரொக்கப் பணம் ரூ .1000 இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து அதை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் சரஸ்வதி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து அனுசியாவை கைது செய்தனர்.