பரமக்குடி பர்மா காலனிப் பகுதியைச் சேர்ந்த செல்லக்கண்ணுவின் மகன் முரளி (28). இவர் தனது நண்பர்களுடன் கிருஷ்ணா திரையரங்கம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த சிலர், எங்கள் பகுதிக்கு எப்படி வரலாம் எனக்கூறியதால் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த முரளி பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் ராஜா உள்பட 5 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அதே போல், எதிர்தரப்பில் சபரீஸ்வரன் பலத்த காயத்துடன் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்தப் புகாரின் பேரில் விக்னேஷ் உள்பட 4 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சேது மகன் விக்னேஷ் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.