கமுதி அருகே கால்நடை மருத்துவமனை சுற்றுச் சுவரை சேதப்படுத்தி சிலர் உள்ளே சென்று சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
கமுதி அடுத்துள்ள கோட்டைமேட்டில் கமுதி மற்றும் கமுதியை சுற்றியுள்ள கிராம விவசாயிகளின் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கால்நடை மருத்துவமனை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதில் கால்நடைகளுக்கு தேவையான அனைத்து வகையான சிகிச்சைகளும் மருந்துகளும் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கால்நடை மருத்துவமனையின் சுற்றுச் சுவரை அப்பகுதியில் உள்ள சிலர் உடைத்து உள்ளே சென்று இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், நீதி மன்ற வளாகம், அரசுப் பள்ளி என பல்வேறு அரசு அலுவலகங்கள் மத்தியில் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையில் இரவு நேரங்களில் இது போன்ற அத்து மீறல்கள் நடைபெற்ற வருவதால் அனைத்து அலுவலகங்களிலும் தளவாடங்கள் திருடு போகும் அபாயம் உள்ளது. மேலும் அப்பகுதியில் கஞ்சா விற்பனை உள்பட பல்வேறு சட்ட விரோத செயல்கள் நடைபெற்று வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சேதமடைந்த கால்நடை மருத்துவமனையின் சுற்றுச் சுவரை சீரமைத்து இரவு நேரங்களில் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.